கூடுதல் கட்டணம் வசூலிப்பவர்களுக்கு எச்சரிக்கை!
தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாளை முதல் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து பணிபுரிபவர்கள் சொந்த ஊர் செல்லத் தயாராகி வருகின்றனர்.
பொதுமக்களின் தேவையை பொறுத்து சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அதே நேரம் பண்டிகை காலங்களில் இயக்கப்படும் பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை விழாக்காலங்களை முன்னிட்டு மக்கள் பெரிதளவில் தமது சொந்த ஊர் செல்லும் போது ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்க வாய்ப்பு உள்ளது. இதனையடுத்து தமிழகம் முழுவதும் ஆம்னி பஸ்களுக்கான சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் சரக அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் விதிகளை மீறி இயக்கப்படும் வாகனங்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும். அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் வரி செலுத்தாத ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் வசூலித்தால் உடனடியாக புகார் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண் 1800 4256151 என்ற எண்ணில் அழைக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.