ஏ.டி.எம். கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிப்பு... முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!

ஏ.டி.எம். கட்டண உயர்வால் ஏழை மக்கள் பாதிக்கப்படுவார்கள் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் "அனைவரும் வங்கியில் கணக்கு தொடங்குங்கள்’ என மத்திய அரசு சொன்னது. பிறகு பணமதிப்பிழப்பு நடவடிக்கை கொண்டு வந்து, டிஜிட்டல் இந்தியா என்றார்கள்.
அடுத்து என்ன? டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் பிடித்தார்கள். குறைவான இருப்புத்தொகை என்று சொல்லி அபராதம் விதித்தார்கள். தற்போது, அனுமதிக்கப்பட்ட மாதாந்திர அளவைத் தாண்டி ஏ.டி.எம்.மில் பணம் எடுக்கும் ஒவ்வொரு முறையும் 23 ரூபாய் வரை கட்டணம் பிடிக்க வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.
இதனால் என்ன ஆகும்? தேவைக்கு மீறி, ஒரேயடியாக மக்கள் தங்கள் பணத்தை எடுக்க வேண்டி வரும். குறிப்பாக ஏழைகளுக்கும் வங்கிச் சேவைகள் சென்று சேர வேண்டும் என்ற நோக்கத்தையே இது சிதைத்துவிடும். ஏற்கனவே நிதி விடுவிக்கப்படாமல் தவிக்கும் நூறு நாள் வேலைத் திட்டப் பயனாளிகள், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெறும் ஏழைகள்தான் அதிக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.
இது டிஜிட்டல் மயமாக்கம் அல்ல, இது நிறுவனமயமாக்கப்பட்ட சுரண்டல் ஆகும். ஏழைகள் ஏ.டி.எம். அட்டையை தேய்க்க, பணக்காரர்கள் திளைக்கிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.