எங்கள மீறி சென்னையில எதுவும் செய்ய முடியாது... இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசப் பேச்சு!
தமிழகத்தின் தலைநகர் சென்னையில் ஜூலை 5ம் தேதி 6 பேர் கொண்ட மர்ம கும்பல் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை அவரது வீட்டிற்கு அருகே படுகொலை செய்தது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பிரபலங்கள் கண்டனம் தெரிவித்தனர். இச்சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்தக் கொலையை கண்டித்தும், தலித் அரசியல் தலைவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் நீலம் பண்பாட்டு சார்பில் நேற்று பேரணி நடத்தப்பட்டது. இந்தப் பேரணி எழும்பூர் ரமடா ஹோட்டல் அருகே தொடங்கிய இந்த பேரணி மவுண்ட் ரோடு வழியாகச் சென்று எழும்பூர் இராஜ ரத்தினம் அரங்கத்தின் அருகே நிறைவு பெற்றது. பேரணியில் கலந்து கொண்ட இளைஞர்கள் பலர் 'MARCH FOR JUSTICE' என்ற வாசகம் அடங்கிய கருப்பு உடையை அணிந்திருந்தனர்.
அத்துடன் படுகொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங் போன்ற முகமூடிகளை அணிந்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இந்த பேரணியில் இயக்குநர் பா.ரஞ்சித், நடிகர் மன்சூர் அலிகான், அட்டக்கத்தி தினேஷ், திருமுருகன் காந்தி, பூவை ஜெகன் மூர்த்தி, சின்னத்திரை நடிகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் மேடையில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், “ நாங்கள் திமுக மீது குற்றம் சுமத்துவதற்காக இந்த பேரணி நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் எழுதுகின்றனர். அரசு அதிகாரிகள், காவல்துறையினர், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதை உணர வேண்டும்.
அதிகாரத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை நீங்கள் ரவுடி என்று சொல்வீர்களா? அப்படிச் சொன்னால் நாங்கள் ரவுடிகள் தான். இந்த படுகொலையை எளிதாக கடந்து விடலாம் என நீங்கள் நினைக்காதீர்கள், இது ஒரு எச்சரிக்கை மட்டுமே. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்த உண்மையான குற்றவாளிகளை கைது செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம். காவல்துறை விசாரணை மீது எங்களுக்கு நம்பிக்கை இழந்தால் எங்களுடைய முடிவுகள் மாறக்கூடும். ஆம்ஸ்ட்ராங் கொலையில் பல்வேறு சூழ்ச்சிகள் நிறைந்துள்ளன.
சென்னையை பொறுத்தவரை எங்களை மீறி நீங்கள் எதுவும் செய்ய முடியாது. சென்னையில் மட்டும் 40 சதவீத தலித் மக்கள் வசித்து வருகின்றனர். நாங்கள் அரசியலற்று இருக்கலாம். ஆனால் அரசியல் உடையவர்களாக மாறும்போது நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்கும் நிலை வரும். பிரியா ராஜன், மேயர் பதவிக்கும், கயல்விழி செல்வராஜ் அமைச்சர் பதவிக்கும் எப்படி வந்தார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பிரியா திமுகவில் இருப்பதால் அவர் மேயர் இல்லை. ரிசர்வேஷன் இருந்ததால் தான் பிரியா மேயராகவும், கயல்விழி செல்வராஜ் அமைச்சராகவும் அமர முடிந்தது என்பதை உணர வேண்டும். ஆனால் இவர்கள் இருவருமே ஆம்ஸ்ட்ராங் கொலைக்குக் குரல் கொடுக்கவில்லை. அவர்கள் திமுகவில் இருப்பதால்தான் குரல் கொடுக்கவில்லையா?" எனக் காரசாரமாக இயக்குநர் ரஞ்சித் கேள்வி எழுப்பினார். அதே நேரத்தில் "திருமாவளவனுக்கு எதிராக நான் ஒருபோதும் இருக்கமாட்டேன்.
நாங்கள் எப்போதும் அவருடன்தான் இருப்போம். பட்டியலின மக்களுக்கான உரிமை குறித்துப் பேசினால் 'பி டீம்' என சொல்கின்றனர். பாஜகவுக்கு நேர் எதிரானவர்கள் நாங்கள். தமிழகத்தில் ஆணவக் கொலைகள் நடந்து கொண்டிருக்கிறது. நான் திமுகவிற்கு எதிராகப் பேசவில்லை.அனைத்துக் கட்சிக்கு எதிராகப் பேசுகிறேன்.
அனைத்து கட்சிகளும் எங்களை ஏமாற்றுகிறார்கள்.சமூக நீதியைப் பின்பற்றும் திமுகவிற்கு ஒரு வேண்டுகோள். சென்னையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு மணி மண்டபம் கட்ட அரசு அனுமதி தர வேண்டும். மற்ற ஜாதி பிரச்சினைகளும், தலித் மக்களின் பிரச்சனையும் வேறு; இரண்டையும் ஒன்றாக அணுகாதீர்கள். ஆம்ஸ்ட்ராங்குக்குப் பிறகு தலித் மக்களின் கோரிக்கைகளையும், பிரச்சனைகளையும் நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுக்கும்” எனப் பேசியுள்ளார்.
ஆடி மாதத்தில் சுபகாரியங்களை செய்யலாமா? கூடாதா?!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா