அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் ஆடிக்கிருத்திகை... எப்படி விரதம் இருப்பது?
iஇன்று ஜூலை 29ம் தேதி திங்கட்கிழமை ஆடிக்கிருத்திகை. ஆடி மாதம் முழுவதுமே அம்மன் மாதம். அம்மனுக்கு விசேஷமான மாதத்தில் திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள். அம்மைக்கும், அப்பனுக்கு உகந்த நாளில் சுப்பனின் பிறந்த நட்சத்திர நாள் அமோகமான நாள். இந்நாளில் விரதமிருந்து மனமுருகி பிரார்த்தனை செய்திட நினைத்த காரியம் நிறைவேறும். வேண்டும் வரம் அருள்வார் சுப்பிரமணியன்என்பது காலம் காலமாக ஆன்மிக அன்பர்களிடையே கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கை.
மாதம் தோறும் வரும் கார்த்திகை தினங்கள் விசேஷமானவை என்றாலும் தை கிருத்திகை, ஆடி கிருத்திகைக்கு தனிச்சிறப்பு உண்டு. ஆடி கார்த்திகை தினத்தில் விரதம் இருந்தால், தோஷங்கள் விலகி ஓடும். இவ்வளவு சிறப்புமிக்க இந்த ஆடி கார்த்திகையில் யாரெல்லாம் கடைப்பிடிக்கலாம்?சிவபெருமானின் அருளால் தோன்றி ஆறு கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டவர் முருகப்பெருமான். அந்த கார்த்திகை பெண்களை கௌரவிக்கும் வகையில் அவர்கள் ஆறு பேரும் ‘கார்த்திகை’ நட்சத்திரமாக மாறி முருகப்பெருமானை வழிபடும் தினமே கார்த்திகை.
அனைத்து முருகன் கோவில்களிலும் முருக பக்தர்கள் காவடி சுமந்து,நேர்த்தி கடன்களை செலுத்துவது வழக்கம். ஆனால் கொரோனா காரணமாக ஆடி திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த ஆடி கிருத்திகை தினத்தில் கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், திருப்புகழ் பாடல்களை ஒலிக்கச் செய்து கேட்கலாம்.
இந்த ஆடி கிருத்திகை தினத்தில் குளித்து முடித்து விட்டு, பூஜை அறையில் அரிசி மாவில் அறுகோண கோலம் இட வேண்டும்.
பின்பு முருகனின் படத்திற்கு இருபுறமும் நெய் தீபமேற்றி, பூக்கள் மற்றும் பழங்களை நிவேதனம் வைத்து உணவு மற்றும் நீரேதும் அருந்தாமல் கந்த சஷ்டி கவசம் அல்லது சண்முக கவசம், முருகன் துதிப் பாடல்களை பாடலாம்.இயலாதவர்கள் நாள் முழுவதும் உப்பு சேர்க்கப்படாத உணவை உண்டு மாலையில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.இதனால் தீராத கஷ்டங்கள் தீர்ந்து சகல சௌபாக்கியங்களும் கிடைக்கபெறலாம் என்பது ஐதீகம்.
ஓம் சரவண பவ…