எங்க நிலம்.. இங்க வராதீங்க.. விஷம் குடித்து தற்கொலை மிரட்டல்.. அதிர்ச்சியடைந்த அதிகாரிகள்..!!

 

அளந்துக்கொடுக்க வந்த ஆதி திராவிடர் நலத்துறை அதிகாரிகள் முன் எங்கள் நிலம் எனக்கூறி விஷம் அருந்தி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த சானமாவு என்னும் கிராமத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 2.30 ஏக்கர் நிலத்தில்  41 பட்டியலின சமூக  மக்களுக்கு  பட்டா வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இடம் அளந்து பயனாளர்களுக்கு வழங்கப்படாத நிலையில், ஆதே ஊரில், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் பல ஆண்டுகளாக விவசாயம் செய்து தங்களது கட்டுப்பாட்டிலேயே வைத்துக்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளந்து கொடுக்க  நீதிமன்ற உத்தரவின் படி கடந்த மாதம் வீடு கட்டும் விழாவினை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் மேற்கொண்டபோது இரண்டு தரப்பினருக்கிடையே தகராறு ஏற்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி இடம் அளந்துக்கொடுக்க அதிகாரிகள் ஒரு மாதம் கால அவகாசம் கோரியிருந்தனர்.

அதன்படி இன்று, பட்டா வழங்கப்பட்ட இடத்தை அளக்க ஆதி திராவிட நலத்துறை அதிகாரிகள் தாசில்தார் உள்ளிட்டோர் வந்தபோது, பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மாதேவம்மா(38), முருகேசன்(30), மஞ்சு(32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே அதிகாரிகள் முன்னிலையில் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். உடனடியாக அவர்களை மீட்டு,  ஒசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதில் மஞ்சு என்பவர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.