நீச்சல் பழக சென்ற இடத்தில் விபரீதம்.. கணவன் மனைவி பரிதாபமாக பலியான சோகம்..!!

 

கிணற்றில் நீச்சல் பழகச் சென்ற தம்பதி நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த சங்கங்காடு பகுதியில் சோமசுந்தரம் - மகேஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு எட்டு வயதில் மகன், நான்கு வயதில் மகள் உள்ளனர். இந்நிலையில், சோமசுந்தரம் தனது மனைவி மகேஸ்வரிக்கு நீச்சல் கற்றுத் தருவதற்காக அருகில் உள்ள விவசாய கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். இதனிடையே கிணற்றுக்கு சென்ற இருவரும் நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

இதனால் அச்சமடைந்த சோமசுந்தரத்தின் மகன் அருகில் இருந்தவர்களை அழைத்துக் கொண்டு கிணற்றில் சென்று பார்த்துள்ளார். அப்போது மகேஸ்வரி சடலமாக மிதப்பதை கண்டு அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து திருச்செங்கோடு காவல்நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்தநிலையில், கிணற்றில் மிதந்த மகேஸ்வரி உடலை மீட்டதுடன், சோமசுந்தரத்தின் உடலை மீட்க கிணற்றில் உள்ள நீரை வெளியேற்றினர்.

இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீரை சுமார் நான்கு மணிநேர போராட்டத்திற்கு பின் அகற்றிய தீயணைப்புத் துறையினர், கிணற்றின் அடிப்பகுதியில் சேற்றில் சிக்கியவாறு கிடந்த சோமசுந்தரத்தின் உடலையும் கைப்பற்றினர். நீச்சல் பழக சென்ற பெற்றோர் உயிரிழந்த நிலையில், குழந்தைகள் இரண்டு பேரும் ஆதரவின்றி தவிக்கின்றனர்.