சிரியா மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல்.. 9பேர் பரிதாபமாக பலியான சோகம்..!!

 

சிரியா மீது அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அறிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பகுதிகளில் உள்ள பெரும்பாலான நாடுகளில், ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. ஈராக், சிரியா உள்ளிட்ட நாடுகளில் பயங்கரவாதிகளை ஒழிப்பதற்காக அமெரிக்கா தனது துருப்புகளை நிறுத்தியுள்ளது. அமெரிக்க வீரர்கள் தங்கியிருக்கும் வீடுகள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள். அமெரிக்காவும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், சிரியாவில் ஈரான் ஆதரவுடன் செயல்பட்டு வரும் பயங்கரவாத குழுக்களின் நிலைகள் மீது அமெரிக்கா வான்தாக்குதல் நடத்தியது. இதில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 2 அமெரிக்க எஃப்-15 போர் விமானங்கள் சிரியாவில் குண்டுமழை பொழிந்ததாக, அமெரிக்காவின் பாதுகாப்பு செயலாளர் லாய்டு ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

மேலும், அமெரிக்க அதிகாரிகளின் பாதுகாப்பை விட உயர்ந்தது ஏதும் இல்லை என ஜோ பைடன் தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2 வாரங்களில் அமெரிக்காவின் 2வது தாக்குதல் இதுவாகும். கடந்த மாதம் 17ம் தேதியில் இருந்து அமெரிக்க துருப்புகள் மீது குறைந்தது 40 முறையாவது தாக்குதல் நடத்தியிருப்பார்கள் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.