சாவர்க்கர்... கோட்சே வழியில் வந்தவர்களுக்கு சளைத்தவர்களில்லை... ரூ.50,000 கோடியை வாங்கி தாங்க... ஆளுநருக்கு அப்பாவு பதிலடி!

 

 

இன்னும் கோடை வெயில் துவங்கவேயில்லை. அதற்குள் தமிழக அரசியல் களம் உஷ்ணமடைந்துள்ளது. கடந்த வருடம் தமிழக ஆளுநர் சட்டமன்றத்தில் கிளப்பிய சர்ச்சை, தொடர்ச்சியாக இந்த வருடமும் நீள்கிறது. 
இன்று காலைதுவங்கிய சட்டமன்ற கூட்டத்தொடரில் , அனைவருக்கும் வணக்கம் என தமிழில் பேசி தனது உரையைத் தொடங்கிய தமிழக ஆளுநர், “வாழ்க தமிழ்நாடு, வாழ்க பாரதம்” என்று மட்டும் கூறி தமிழக அரசு தயாரித்திருந்த உரையை வாசிக்காமல் புறக்கணித்து அமர்ந்தார். அதற்கான காரணமாக சட்டசபையில் தேசிய கீதம் புறக்கணிக்கப்பட்டதாக சட்டசபையில் ஆளுநர் கூறினார். 
அதன் பின்னர் ஆளுநர் உரையின் தமிழாக்கம் முழுவதையும் சபாநாயகர் அப்பாவு படித்து முடித்தார். அத்துடன் ஆளுநரை பார்த்து அவர், நாட்டுப்பண் இசைத்தல் குறித்து ஆளுநர் எழுதிய கடிதம் கடந்த ஆண்டே தீர்க்கப்பட்டுவிட்டது. இந்த பேரவை எப்போதும் மரபுகளை பின்பற்றி வருகிறது. மாண்புமிகு ஆளுநர் உரை தொடக்கத்திற்கு முன் தமிழ்த்தாய் வாழ்த்தும், பின்னர் நாட்டுப்பண்ணும் இசைக்கப்பட்டு வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனக் கூறினார்.


அத்துடன் நிறுத்திக் கொள்ளாத சபாநாயகர் அப்பாவு,  “தமிழ்நாடு புயல் வெள்ளத்திற்கு மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை. பி.எம்., கேர் நிதியிலிருந்து ரூ.50,000 கோடியை வாங்கித் தரலாமே... கணக்கு கேட்க முடியாத பல கோடி ரூபாய் பணம் பி.எம்., கேர் நிதியில் உள்ளது. அதிலிருந்து  ரூ.50,000 கோடியை ஆளுநர் வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும்" என்று கேட்டுக்கொண்டார்.
"சாவர்க்கர் வழியில், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு தமிழகமும், தமிழக மக்களும், சட்டமன்றமும் சளைத்ததில்லை. ஆளுநர் உரை என்பது அரசியல் அமைப்பு சட்டப்படி அவரது கடமை. அந்த மரபுகளை மீறி ஆளுநர் உரை அமைந்துள்ளது" என்று பேசினார். 


அதைத் தொடர்ந்து “2024 ம் ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடரில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆளுநர் உரை இந்த மன்றத்திற்கு வழங்கப்பட்டபடியே பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை முன்மொழிகிறேன்” என அவை முன்னவர் துரைமுருகன் கொண்டு வந்த தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேறியது.
கடந்த ஆண்டு போலவே இந்த ஆண்டும் தேசிய கீதம் இசைக்கும் முன்னரே சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தார் ஆளுநர் ரவி. சட்டசபையில் முதலில் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்ற ஆளுநர் கருத்து சபைக்குறிப்பில் இடம் பெறாது எனவும் சட்டசபை சபாநாயகர் அப்பாவு அதிரடியாக அறிவித்தார்.