undefined

100 வீடுகளில் திருடி சதம் அடித்த பலே கில்லாடிகள்.. வீட்டை விட்டு போன 25 நிமிடங்களிலே கைவரிசை..!!

 

சுமார் 100 குடியிருப்புகளில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள அந்தேரியில் சேல்ஸ்மேன் வேடத்தில் வந்த 3 கொள்ளையர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடுத்துச் சென்றுள்ளனர். விஜய் நகர் சொசைட்டி அடுக்குமாடி குடியிருப்பில் நவம்பர் 6ஆம் தேதி இந்தத் திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. சேல்ஸ்மேன் தோற்றத்தில் வந்த மூன்று பேர் பூட்டியிருந்த சுமார் 100 குடியிருப்புகளில் யாரும் இருக்கிறார்களாக என்று வேவு பார்ப்பதை சிசிடிவி காட்சிகளில் காணமுடிகிறது.

இதுகுறித்து சமீபத்தில் குடியிருப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான வின்சென்ட் (73) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். "கோவா செல்வதற்காக நவம்பர் 6ஆம் தேதி மாலை 5 மணிக்கு நான் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியே சென்ற 20 நிமிடங்களில் திருட்டு நடத்திருக்கிறது. ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்கள், ரூ.97,500 மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி மற்றும் ரூ.7,000 மதிப்பிலான கைக்கடிகாரம் ஆகியவை திருடப்பட்டுள்ளன" என்று அவர் கூறியிருக்கிறார்.

"சில ஆண்டுகளுக்கு முன்பு, இதே அடுக்குமாடிக் குடியிருப்பில் இரவு நேரத்தில் திருட்டுகள் நடந்தன. ஆனால் இந்த முறை, சொசைட்டி தலைவர் வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களில் மாலை நேரத்தில் திருட்டு நடந்துள்ளது. அவர்கள் மீண்டும் வரக்கூடும் என்று நாங்கள் பயப்படுகிறோம்" என்று குடியிருப்பில் வசிக்கும் மஞ்சுநாத் ஷெட்டி தெரிவிக்கிறார். வின்சென்ட் கோவாவுக்குப் புறப்பட்ட பின்பு பக்கத்து கட்டிடத்தில் வசிக்கும் அவரது மகன் தந்தையின் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, படுக்கையறையில் இருந்த அலமாரியும் திறந்து கிடப்பதைப் பார்த்து திருட்டு நடத்திருப்பதை உணர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், "பாதுகாப்புக் குறைபாடுதான் இதற்குக் காரணம். குடியிருப்புக்கு மூன்று நுழைவாயில்கள் உள்ளன. ஆனால், மூன்று புறங்களில் இருந்த செக்யூரிட்டி ஊழியர்களும் திருடர்கள் உள்ளே நுழைந்ததை கவனிக்கவில்லை என்று கூறுகிறார்கள். அவர்கள் வின்சென்ட் மற்றும் சொசைட்டி உறுப்பினர்களால் பணியமர்த்தப்பட்டவர்கள்தான். அவர்களிடம் விசாரிக்கிறோம். சிசிடிவி காட்சிகள் மூலம் திருடர்கள் மூவரையும் கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது" என்கிறார். "திருடர்களை விரைவில் கண்டறிந்து கைது செய்ய வேண்டும். அப்போதுதான் குடியிருப்பில் இருப்பவர்கள் நிம்மதியாக வசிக்க முடியும்" என்று மற்றொரு குடியிருப்பு வாசியான ஸ்வப்னில் முண்டியே கூறுகிறார்.