மிக கொடூரம்.. ஆசை ஆசையாய் கல்யாணத்திற்கு காத்திருந்த பெண் மீது ஆசிட் வீச்சு..!!

 

இளம்பெண் முகத்தை குறிவைத்து  அமிலத்தால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உத்தரபிரதேசத்தின் மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட பெண் குடியிருப்பின் அருகிலுள்ள மார்க்கெட்டுக்கு தனது தாயுடன் நேற்று சென்றிருக்கிறார். அப்போது முகத்தை மறைத்துக்கொண்டு குறுக்கிட்ட 2 இளைஞர்கள், வழிகேட்பது போல அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவர்களின் நோக்கத்தில் சந்தேகமடைந்த பெண்ணின் தயார், மகளுடன் அங்கிருந்து அகல முயன்றிருக்கிறார்.

அப்போது இளைஞர்களில் ஒருவன், இளம்பெண் முகத்தை குறிவைத்து கைவசமிருந்த அமிலத்தால் தாக்கியதும், இளைஞர்கள் இருவருமாக அங்கிருந்து ஓடி மறைந்தனர். அருகில் இருந்தவர்கள் உதவியுடன் மகளை மாவட்ட மருத்துவமனையில் அவரது தாயார் சேர்த்தார். ஆனால் அமில வீச்சின் பாதிப்பு அதிகமிருப்பதாகக் கூறி கோரக்பூர் மருத்துவமனைக்கு மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில், இளம்பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இளம்பெண் உயிருக்கு ஆபத்து இல்லாதபோதும், அமில வீச்சினால் முகம் சேதமடைந்திருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாட்டில் அமில வீச்சுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் கடுமையாக்கப்பட்டுள்ளதால், காவல்துறையினர் விரைந்து  வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர் . சம்பவ இடத்தின் சுமார் 20க்கும் மேலான சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி, அமில வீச்சு குற்றத்தினை நிகழ்த்திய இளைஞர்களை அடையாளம் காணும் பணியினை தொடங்கியுள்ளனர்.

அந்த இளைஞர்கள் திட்டமிட்டு தங்களது முகத்தினை மறைந்துக்கொண்டு நடமாடி இருப்பதால், சம்பவ இடத்தில் செயல்பாட்டில் இருந்த அலைபேசி எண்களை ஆராய்ந்து குற்றவாளிகளை வளைக்க முயன்று வருகின்றனர். மேலும், இளம்பெண்ணின் முன்னாள் காதலர்கள் எவரேனும் இந்த குற்ற செயலில் ஈடுபட்டிருப்பார்களா என்ற கோணத்திலும் விசாரித்தனர். இந்நிலையில் ஆசிட் வீசிய இளைஞர் ஒருவரை காவல்துறையினர் சுட்டு பிடித்தனர்.