கப்பலில் பழுது பார்த்த போது கேஸ் வெடித்து பயங்கர விபத்து.. பணியாளர் பரிதாப பலி..!!

 
 

சென்னை துறைமுகத்தில் கப்பலில் பழுது மேற்கொண்டபோது கேஸ் பைப் லைன் வெடித்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சென்னை துறைமுகம் வளாகத்தில் கோஸ்டல் ஒர்க் பிளேஸ் என்ற இடத்தில் ஆயில் ஏற்றி செல்லக்கூடிய எம்டி பேட்ரியாட் என்ற ஒடிசாவை சேர்ந்த கப்பல் கடந்த 31ம் தேதி பழுது நீக்கும் பணிக்காக சென்னைக்கு கொண்டு வரப்பட்டது. ராயல்டேக் என்ற நிறுவனம் மூலம் பழுது சரிசெய்யும் பணி நடைபெற்று வந்தது. 

அப்போது கப்பலில் போல்ட்டை கேஸ் கட்டர் மூலம் அகற்றியபோது அருகிலிருந்த காஸ் பைப் லைன் மீது பட்டு வெடித்துள்ளது. இதில் அந்த பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சகாய தங்கராஜ் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், விபத்தில் காயமடைந்த ஜோஸ்வா, ராஜேஷ், புஷ்பலிங்கம் ஆகியோர் படுகாயமடைந்தனர். 

இதனையடுத்து படுகாயமடைந்தவர்களை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சென்னை துறைமுகம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.