மிளகாய்ப் பொடி தூவி... மதுரையில் காதல் ஜோடி வெட்டிக் கொலை... காதலியின் தம்பி வெறிச்செயல்!

 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில், காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, தனது அக்காவையும், அவரது காதலனையும் சகோதரனே வெட்டிக் கொன்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரட்டைக் கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்(28). அதே பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில், கடந்த 3 வருடங்களுக்கு முன் மகாலட்சுமிக்கு வேறு ஒருவருடன் திருமணமானது. ஆனால், திருமணமான ஒரே வாரத்தில் கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தனது தாய் வீட்டிற்கே வந்துவிட்டார் மகாலட்சுமி.

இதையடுத்து, மகாலட்சுமி தனது முன்னாள் காதலனான சதீஷ்குமாருடன் மீண்டும் பழக தொடங்கியுள்ளார். இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி வந்ததுடன், அடிக்கடி தனியாக வெளி இடங்களுக்கும் சென்று வந்துள்ளனர். இந்த விவரம், மகாலட்சுமியின் தம்பி பிரவீன்குமாருக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தனது சகோதரியைக் கண்டித்துள்ளார். அவரது காதலன் சதீஷ்குமாரையும் எச்சரித்துள்ளார். இருப்பினும் இருவரும் இதை பெரிதுபடுத்தாமல் தங்களின் காதலைத் தொடர்ந்தனர்.

இவ்வளவு தூரம் சொல்லியும் இருவரும் தனது பேச்சைக் கேட்கவில்லையே என ஆத்திரம் கொண்ட பிரவீன்குமார், இருவரையும் கொலை செய்ய முடிவு செய்தார். இந்நிலையில், நேற்று இரவு சதீஷ்குமார் வேலை முடிந்து கொம்பாடியில் உள்ள தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அவரை வழிமறித்த பிரவீன்குமார், கண்களில் மிளகாய் பொடியைத் தூவி நிலைகுலையச் செய்துவிட்டு, அரிவாளால் அவரது தலையை துண்டித்திருக்கிறார்.

துண்டித்த தலையை அந்தப் பகுதியில் உள்ள நாடக மேடையில் வைத்துவிட்டு, நேராக தனது வீட்டுக்குச் சென்ற பிரவீன் குமார் வீட்டில் இருந்த சகோதரி மகாலட்சுமியையும் கழுத்தை அறுத்து கொலை செய்தார். அந்த சமயத்தில் தடுக்க வந்த தாய் சின்னப்பிடாரியையும் கையை வெட்டித் துண்டித்துவிட்டு அங்கிருந்து ஓடி தலைமறைவாகி இருக்கிறார் பிரவீன் குமார்.

தனது சகோதரன் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கேள்விப்பட்டு பதறியடித்து ஓடி வந்த சதீஷ் குமாரின் சகோதரர் முத்துக்குமார் இது தொடர்பாக திருமங்கலம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தார்.

உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருமங்கலம் போலீசார், சதீஷ் மற்றும் மகாலட்சுமி உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கைதுண்டிக்கப்பட்ட சின்னப்பிடாரியையும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த இரட்டைக் கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீஸார், தப்பியோடிய பிரவீன் குமாரை வலைவீசி தேடி வருகின்றனர். காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணனே தங்கையை கழுத்தறுத்துக் கொன்ற சம்பவம் திருமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தை மாத ராசிபலன்கள்... யார் யாருக்கு ஏற்றம் தரும்... இந்த மாதத்தில் பரிகார வழிபாடு எது?

தை மாத சிறப்புக்கள், வழிபாடு, பலன்கள்....!

தை வெள்ளிக்கிழமை... மறந்தும் இதை மட்டும் செய்துடாதீங்க!

தை பொறந்தாச்சு... இந்த 6 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் அலைமோதும்... மிஸ் பண்ணாதீங்க