கஜா புயலில் தாயை பறிக்கொடுத்த மகன்.. இதுவரை கொடுக்காத நிவாரண தொகையே கேட்டு பனை மரத்தில் ஏறி போராட்டம்..!!

 

கஜா புயலில் இறந்த தனது தாயாருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகையை வழங்கக் கோரி பனைமரத்தின் உச்சியில் அமர்ந்து மகன் போராட்டம் நடத்தினார்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா பனையங்காடைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவரது தாயார் அம்மாளு அம்மாள் கடந்த 2018 ஆண்டு வீசிய கஜா புயலில் உயிரிழந்தார். இறந்த மறுநாள் பிரேத பரிசோதனை நடந்தாக கூறப்படுகிறது.  இறந்த தாயாரின் பிரேத பரிசோதனை அறிக்கையை வைத்து அரசு அறிவித்த 10 லட்சம் ரூபாய் நிவாரணம் கேட்டு 5 ஆண்டுகளாக வருவாய்த்துறையினரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட முறை மனு அளித்திருக்கிறார்.

வருவாய்த் துறையினர் பல்வேறு காரணங்களை கூறி நிவாரணம் அளிக்க மறுத்து விட்டனர். இதனால் மனமுடைந்த ராமச்சந்திரன் பனை மரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்ள போவதாக வருவாய்த்துறைக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதனைத்தொடர்ந்து, இன்று காலை 9 மணி அளவில் தோப்புத்துறை ரயில்வே நிலையம் அருகே உள்ள 80 அடி உயரமுள்ள பனைமரத்தில் ஏறி,  இறந்த தனது தாயாருக்கு அரசு அறிவித்த நிவாரணத் தொகை வேண்டும் என முழக்கமிட்டவாரே  மரத்தின் உச்சியில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.

தகவல் அறிந்து வந்த வருவாய்த் துறையினர்,  போலீசார்,  தீயணைப்புத் துறையினர் அவரை பனை மரத்திலிருந்து கீழே இறக்குவதற்கு பேச்சுவார்த்தை நடத்தினர்.  இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.  நிவாரணம் கொடுத்தால் மட்டுமே பனைமரத்தை விட்டு கீழே  இறங்குவேன் என ராமச்சந்திரன் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்.