காலையிலேயே அதிர்ச்சி... நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்! 

 

இன்று காலையிலேயே பெரும் அதிர்ச்சியாக செய்தி வெளியாகி இருக்கிறது. சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த நடிகர் ஜூனியர் பாலையா, மூச்சு திணறல் காரணமாக திடீரென மரணமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருக்கு வயது 70. அவரது திடீர் மறைவு திரையுலகினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. அவரது உடல் வளசாரவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாளை இறுதி சடங்குகள் நடைப்பெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஜூனியர் பாலையாவின் இயற்பெயர் ரகு. அஜித்தின் ‘நேர்கொண்ட பார்வை’யில், அஜித்துடன் இருக்கும் பெரியவராக, ரசிகர்களிடையே பிரபலமானவர். இன்னும் அதிக உயரத்திற்கு சென்றிருக்க வேண்டியவரை திரையுலகம் அத்தனை சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும். 

நிறைய சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். ஆனால், அத்தனை கதாபாத்திரங்களையும் வெகு சிறப்பாக செய்திருப்பார். சின்ன சின்ன அசைவுகள் தான். படம் பார்த்து முடித்தும், அவரது கதாபாத்திரம் தனியே தெரியும். எந்த கேரெக்டர் கொடுத்தாலும் வெளுத்துவாங்கிவிடுவார் மனிதர். 

இன்றளவிலும், தமிழ் சினிமாவின் ஜாம்பவான் நடிகர்களாகப் போற்றப்படுபவர்களுள் மிக முக்கியமானவரான பாலையாவின் மகன் தான் ரகு. செல்லமாக ஜூனியர் பாலையா என்கிற அடைமொழியுடன் அழைக்கப்பட்டு வந்தார். 

கமல் நடிப்பில் வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ படத்தில் நடிகராக அறிமுகமானார் ஜூனியர் பாலையா.  அதன் பின்னர், கே.பாலாஜியின் தயாரிப்பில் சிவாஜியுடன் ‘தியாகம்’ படத்தில் பல காட்சிகளில் நடித்தார். ‘வாழ்வே மாயம்’ படத்தில் கமலின் நண்பர்களில் ஒருவராக நடித்தார். இயக்குநர் பிரியதர்ஷனின் ‘கோபுர வாசலிலே’ படத்தில் ஜூனியர் பாலையாவுக்கு அட்டகாசமான கேரெக்டர். தன் நடிப்பை திறம்பட வெளிப்படுத்தியிருந்தார்.  ‘கரகாட்டக்காரன்’ படத்தில், ராமராஜனின் கரகாட்டக் கோஷ்டியில் ஜுனியர் பாலையாவின் நடிப்பு தனித்துத் தெரிந்தது.  ஜூனியர் பாலையாவை தன் படங்களில் தொடர்ந்து பயன்படுத்தியவர் நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ், ‘சுந்தரகாண்டம்’ படத்தில் , ‘சண்முகமணி’ ‘சண்முகமணி’ என்று இவர் பாக்யராஜை குறும்பாக அழைத்த போதெல்லாம் தியேட்டர் குலுங்கியது. 

‘அம்மா வந்தாச்சு’, ‘ராசுக்குட்டி’, ‘வீட்ல விசேஷங்க’ என் அடுத்தடுத்து தன் படங்களில் நல்ல கதாபாத்திரங்களை ஜூனியர் பாலையாவுக்கு தந்திருந்தார் பாக்கியராஜ். ‘சாட்டை’, ‘நேர்கொண்ட பார்வை’ படங்களில் எல்லாம் தன் நடிப்பால், அந்த கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் உயர்த்தி பிடித்திருப்பார்.  அவரை திரையுலகம் இன்னும் முழுமையாக பயன்படுத்தியிருக்கலாம். சென்னை, வளசரவாக்கம் ஆழ்வார் திருநகரில் வசித்து வந்தார் ஜூனியர் பாலையா. அவரது திடீர் மறைவு திரையுலகிற்கு பேரிழப்பு தான். 
எந்நாளும் ரசிகர்களின் நினைவில் இருப்பீர்கள் ரகு சார்... உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்!

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!