அதிர்ச்சி.. முதல்வர் திறந்து வைத்து புதிய பள்ளி கட்டிடம்.. சில நாட்களிலேயே உதிர்ந்த மேற்கூரை..!

 
முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்த நடுநிலைப் பள்ளியின் மேற்கூரை திறந்து வைத்த 20 நாட்களில் மூன்று முறை இடிந்து விழுந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே பேகேபள்ளி எனும் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இதில் 279 மாணவ - மாணவிகள் படித்து வருகின்றனர். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். போதிய வகுப்பறைகள் இல்லை எனக்கூறி, மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப வகுப்பறை கட்டித் தருமாறு மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.இதனையடுத்து, குழந்தைநேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2022-23ம் ஆண்டில் ரூ.1.1 கோடி மதிப்பில், 6 வகுப்பறைகள் கொண்ட கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. இதனை கடந்த 26ம் தேதி முதல்வர் ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

அடுத்த ஒரு வாரத்தில் (அக்.,3) கட்டடத்தின் முதல் தளத்தில் வகுப்பறைக்குள் உள்ள மேற்கூரையும், வெளியே வராண்டா பகுதியில் உள்ள மேற்கூரையும் பெயர்ந்துள்ளது. இது குறித்து பள்ளியின் தலைமை ஆசிரியர் கவுரம்மா, கட்டடம் தரம் இல்லாமல் இருப்பதாக பி.டி.ஓ.,விடம் புகார் அளித்தார்.மீண்டும் விபத்துஇந்த நிலையில், இன்று (அக்.,16) முதல் தளத்தில் மாணவர்கள் ஓவியப் போட்டியில் பங்கேற்றுள்ளனர். அப்போது அதன் மேற்கூரை பகுதி திடீரென பெயர்ந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் சிதறி ஓடினர்.

இது குறித்து ஆய்வு செய்ய பி.டி.ஓ சீனிவாச மூர்த்தி, உதவி பொறியாளர் மாது உள்ளிட்டோர் வந்துள்ளனர். விசாரித்ததில் கட்டடத்தை கட்டியது ஒசூர் திமுக எம்எல்ஏ பிரகாசின் நெருங்கிய தொடர்பில் இருக்கும் காண்ட்ராக்ட் நிறுவனம் என்பது தெரியவந்தது.செய்தியாளர்கள் நடந்த சம்பவத்திற்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடாமல், அதிகாரிகள் செய்தியாளர்களிடம் இந்த செய்திகளை போட வேண்டாம் என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும், சில செய்தியாளர்களிடம் பேரமும் பேசியுள்ளனர். சம்பவம் குறித்து தகவல் சொல்ல வந்த அதிமுக கவுன்சிலரையும் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். முதல்வர் ஸ்டாலின் கட்டடத்தை திறந்து 20 நாளில் 3 முறை மேற்கூரை பெயர்ந்து விழுந்துள்ளதால், மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.