அதிர்ச்சி... பள்ளி மாணவி கர்ப்பம்... ஆசிரியர் உட்பட 2 பேர் கைது!

 

திருச்சி அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவியை கர்ப்பமாக்கிய உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே உள்ள சாத்தனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் அபிமனி (22) அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படிக்கும் 12 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்துள்ளார். 

இது குறித்து தனது பள்ளியின் உடற் கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ்(52) என்பவரிடம் சிறுமி அழுதப்படியே புகார் தெரிவித்துள்ளார். இதனை விசாரிப்பது போல, தன்னுடைய வீட்டிற்கு சிறுமியை வரவழைத்த ஹெரால்டு சகாயராஜ், சிறுமியைத் தொடர்ந்து பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். 

மகளின் நடவடிக்கையில் மாற்றத்தைக் கண்ட பெற்றோர், அடிக்கடி சோர்வாக காணப்பட்ட சிறுமியிடம் விசாரித்துள்ளனர். சிறுமி பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். உடனடியாக சிறுமியின் பெற்றோர், பள்ளி தலைமை ஆசிரியரிடம்  இது குறித்து முறையிட்டுள்ளனர். பள்ளி தலைமையாசிரியர் விசாரிக்க தாமதப்படுத்தியதால், பெற்றோர், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பு எண் 1098 எண்ணில் புகார் அளித்தனர். 

உடனடியாக குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் நேரில் சென்று விசாரணை செய்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிவு செய்து முன்னதாக காதலித்து சிறுமியை பலவந்தப்படுத்திய அபிமணி மற்றும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ஹெரால்டு சகாயராஜ் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.