சோகம்.. மர்ம காய்ச்சலால் பெண் பரிதாபமாக பலி..!

 
ஆவடியில் மர்ம காய்ச்சல் காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடுத்த ஆவடி, நந்தவனம் மேட்டூரைச் சேர்ந்தவர் மோகன், 52; கூலித்தொழிலாளி. இவரது மனைவி கலையரசி, 46; தனியார் நிறுவன ஊழியர். இந்த தம்பதிக்கு ஒரு மகள், மகன் உள்ளனர். கலையரசி கடந்த நான்கு நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பின் காய்ச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன், கலையரசிக்கு மீண்டும் காய்ச்சல் ஏற்பட்டதால், ஆவடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதனை செய்ததில் நரம்பு தொடர்பான மர்ம காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில், உடல் நிலை மோசமானதையடுத்து, நேற்று முன்தினம் மாலை 4:00 மணி அளவில், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி அங்கு இரவு 8:00 மணி அளவில், மூளை காய்ச்சல் பாதிப்பால் உயிரிழந்தார்.

இது ஒருபுறம்இருக்க, கலையரசி மகன் ஸ்ரீதர், 22, கடந்த சில நாட்களாக காய்ச்சலால் ஆவடி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவரது ரத்த மாதிரியை பரிசோதித்த தனியார் மருத்துவமனை, அவருக்கு 'டெங்கு' பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்த நிலையில், அவருக்கு மர்ம காய்ச்சலாக இருக்கலாம் என கூறப்படுகிறது.