ஜோதிடம் பாத்துக்கிட்டே நகை திருட்டு..  3 பெண்கள் அட்ராசிட்டி.!!  

 

 ஜோதிடம் பார்ப்பதாக கூறி வீட்டில் நுழைந்து நகை மற்றும் பணத்தை திருடிய மூன்று பெண்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பங்களாமேடு பகுதியில், போதுராஜ் என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவரது வீட்டில் சிறுமி மட்டும் இருந்துள்ளார். அந்த சமயம் பார்த்து ஜோதிடம் பார்ப்பதாக கூறி நான்கு பெண்கள் வீட்டிற்கு வந்துள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட பெண்கள் வீட்டில் இருந்து 8 லட்சம் ரூபாய் ரொக்கம், 10 சவரன் நகையை திருடிச் சென்றுள்ளனர்.

இது தொடர்பாக உசிலம்பட்டி நகர காவல் துறையினர் வழக்கு பதிந்து சிசிடிவி காட்சிகளை வைத்து நான்கு பெண்களையும் தேடிவந்தனர். இதனையடுத்து தேடப்பட்டு வந்த பெண்கள் நால்வரும் வேறு ஒரு திருட்டு வழக்கு தொடர்பாக கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உசிலம்பட்டி காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.

பின்னர், சிறையிலிருந்த நான்கு பேரில் ஈரோட்டை சேர்ந்த கவிதா, முத்தம்மாள், மீனாட்சி ஆகிய மூன்று பெண்களை ஜாமினில் எடுத்து, உசிலம்பட்டி திருட்டு வழக்கில் கைது செய்து மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். கைதான மூன்று பெண்களுக்கும் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்டதை அடுத்து மீண்டும் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.