”ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது”.. பிக்பாஸ் வீட்டை விட்டு அதிரடியாக வெளியேறிய பவா செல்லதுரை..!

 
பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் வாரம் நிறைவடைந்து இரண்டாம் வாரம் எட்டிய நிலையில் போட்டியாளர் பவா செல்லத்துரை நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல் பறந்தது.  நிகழ்ச்சியின் முதல் வார இறுதியில் மக்களின் வாக்குகள் அடிப்படையில் குறைவான வாக்குகளை பெற்ற அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக பவா செல்லதுரை தற்போது திடீரென பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். பிக் பாஸிடம் பேச வேண்டுமென்று இரண்டு மணி நேரம் கோரிக்கை வைத்த பவாவுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கன்ஃபெஷன் அறையில் பிக் பாஸிடம் பேசிய பவா, இப்போதுதான் இந்த விளையாட்டை புரிந்து கொண்டதாகவும், இனிமேல் ஒரு நாள் கூட தன்னால் இங்கு இருக்க முடியாது என்றும் கூறியுள்ளார். அதற்கான காரணம் என்னவென்று பிக்பாஸ் கேட்டதற்கு பதில் அளித்த அவர், 'இங்கு மனித மனதின் குரூரங்கள் வெளிப்படுகின்றன. 

இதற்கு மேல ஒரு நிமிடம் கூட என்னால் இங்கு நீடிக்க முடியாது என்று ஆணித்தரமாக தெரிவித்ததாகவும், அதன் பிறகு பிக் பாஸ் எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும் பவா இறங்கி வரவே இல்லை என்று தெரிகிறது. நீங்கள் சொல்வது வரையிலும் இங்கேயே தான் இருப்பேன் என்று கன்ஃபெஷன் அறையிலேயே அமர்ந்திருந்ததாகவும் பின்னர் அவர் வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கதை சொல்லி என கருதப்படும் இவர், இந்த சீசனில் சொல்லிய ஒரு சில கதைகளே மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால் மிகவும் கடினமான போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் முதல் வாரத்திலையே நிகழ்ச்சியில் இருந்து பவா செல்லத்துரை வெளியேறி இருப்பது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.