undefined

இளம்பெண்ணிடமிருந்து பணம் பறிப்பு.. கண்ணிமைக்கும் நேரத்தில் எஸ்கேப் ஆன புள்ளிங்கோ!

 

வங்கிக்கு சென்ற பெண்ணிடம் ரூ.35 ஆயிரம் பணம் இருந்த பையை பறித்துவிட்டு மோட்டார் சைக்கிளில் இளைஞர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், திருமாந்துறை சிவன் கோவில் தெருவை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் தனது மனைவி பத்மபிரியா(வயது 35), தனது மகள் அஸ்வந்திகாஸ்ரீயுடன்(10) ஆகியோருடன் வீட்டில் இருந்து ரூ.35 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு திருமாந்துறையில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார்.  அங்கு நகைக்கடனுக்கு வட்டி கட்டுவதற்காக, அதற்கான படிவத்தை அவர் பூர்த்தி செய்து கொண்டிருந்தார். அப்போது அவரது மகள் தின்பண்டம் வாங்கித் தருமாறு கேட்டதால், அருகில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு அவர் நடந்து சென்றுள்ளார்.

பின்னாடியே இரு சக்கர வாகனத்தில் அசுர வேகத்தில் வந்த இளைஞர்கள் இரண்டு பேர் தமிழ்செல்வனின் மனைவி பத்மபிரியா கையில் வைத்திருந்த பணப்பையை பறித்துக்கொண்டு, கண் இமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பத்மபிரியா, சத்தம் போட்டு கூச்சலிட்டார். ஓடிவந்த தமிழ் செல்வன், பணத்தை திருடர்கள் பறித்து செல்வதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து மங்களமேடு போலீஸ் நிலையத்தில் பத்மபிரியா தமிழ் செல்வன் தம்பதி புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தனர். மேலும் வங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார்கள். அதில் பணத்தை பறித்து சென்ற இளைஞர்களின் உருவம் பதிவாகியிருந்தது. அதனை கொண்டு திருமாந்திரை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.