அரைகுறை ஆடையுடன் டேன்ஸ்.. கலாச்சாரத்தை சீரழிக்கும் ஹேப்பி ஸ்ட்ரீட்.. கொந்தளித்த நடிகர் ரஞ்சித்..!

 

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி கலாச்சாரம் பேரிழப்பிற்கு கொண்டு செல்லும் என நடிகர் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களின் மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் சென்னையில் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற பெயரில் நிகழ்ச்சி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டது. ஞாயிற்றுக் கிழமையில் சாலையில் மேடை அமைத்து பாடல்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்த, சாலையில் கூடியுள்ள இளைஞர்கள், இளம் பெண்கள் ஆட்டம், பாட்டம் என கொண்டாடி மகிழ்கின்றனர். பலரும் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சியில் கூடி தங்கள் கவலைகளை மறந்து ஆடிப்பாடி செல்கிறார்கள். ஆனால், இந்த நிகழ்ச்சிக்கும் சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை மாவட்டம் சவுரிப் பாளையத்தில் நேற்று நடைபெற்ற வள்ளி கும்மியாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஞ்சித், “சமீப காலமாக மனக் கசப்பான சில சம்பவங்கள் நடைபெறுகின்றன. இப்போதெல்லாம் தெருவுக்கு தெரு நின்று ஹேப்பி ஸ்ட்ரீட் கொண்டாடிகிட்டு இருக்காங்க.. நீங்கல்லாம் எங்கிருந்துடா வர்றீங்க.. உங்க அம்மா அப்பாலாம் யாரு? பெண் பிள்ளைகளை அரைகுறை ஆடையுடன் தெருவில் நிற்க வைத்துக்கொண்டு ஆடுகிறார்கள்.

ரொம்ப வேதனையா இருக்குங்க. எனக்கு மட்டும் பவர் இருந்துதுனா கண்டிப்பாக எல்லாரையும் புடுச்சி ஆயுள் தண்டனைதான் குடுப்பேன். ஊருக்கு நடுவே மேடை போட்டு அரைகுறை ஆடையோட எந்த இளம்பெண்னும் யார் கூட வேண்டுமானாலும் ஆடலாமா? மன் அழுத்தத்தை போக்குவதற்கு தெருவில் இறங்கி கூத்தடிப்பதுதான் முறையா? இதற்கு எப்படி பெற்றோர் அனுமதிக்கிறாங்க? இந்த கலாச்சாரம்தான் அடுத்த பேரழிவை நோக்கி இழுத்துச் செல்லும்.

செல்போன் வாங்குபோது போன் பேச மட்டும் என்று நினைத்த நிலையில் இன்று அதில் ஆபாச படம் பார்க்கும் அளவுக்கு குழந்தைகள் கெட்டுபோகக் கூடிய வளர்ச்சி இருக்குது. இதுபோலதான் தெருவில் இறங்கி ஆடக்கூடிய ஹேப்பி ஸ்ட்ரீட், ஹேப்பி சண்டே நிகழ்ச்சிகளும். இதெல்லாம் அடுத்த தாய்லாந்து, சிங்கப்பூரை போல தமிழகத்தை கொண்டு செல்லும். ஆனால், நம் மக்கள் அதனை வர விடமாட்டார்கள்” என்று தெரிவித்தார்.

இவரின் கருத்துகளுக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பண்டைய பழக்கவழக்கங்களை கடைப்பிடிக்க சொல்லும் பூமராகவே இருக்கிறார் என இணையதளவாசிகள் கலாய்த்து வருகின்றனர்.