கனடா விசா சேவை.. இன்று முதல் மீண்டும் துவக்கம்..!!

 
கனடா மக்களுக்கான விசா சேவையை இந்திய தூதரகம் இன்று முதல் மீண்டும் தொடங்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜார் கடந்த ஜூன் மாதம் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவத்தில் இந்தியாவிற்கு தொடர்புள்ளதாக கனடா குற்றம்சாட்டியது. இதையடுத்து இந்தியா-கனடா இடையே நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, இந்திய தூதர்களை வெளியேற கண்டா பிரதமர் ஐஸ்டின் ட்ரூடோ உத்தரவிட்டார். இதற்கு பதிலடியாக இந்தியாவில் உள்ள கனடா தூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையே, கடந்த மாதம் 21ம் தேதி கனடா நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வர விரும்பும் அந்நாட்டு குடிமக்களுக்கு இந்தியாவில் நுழைய வழங்கப்படும் விசா எனப்படும் உள்நுழையும் அனுமதியை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.அதை போல் கனடா மக்களுக்கான விசா சேவைகளை மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தி வைக்க விசா சேவை மையங்களுக்கும் இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் கனடாவில் இருந்து தொழில், மருத்துவம் உள்ளிட்ட காரணங்களுக்காக பயணிகள் இந்தியாவுக்கு வருவது உள்ளிட்ட பல்வேறு விசா சேவைகளை இன்று (அக்டோபர் 26) முதல் இந்தியா மீண்டும் துவங்க உள்ளது. டொரண்டோ மற்றும் வான்கூவரில் உள்ள துணை தூதரகங்களில் இந்த விசா சேவைகள் தொடங்கப்படும் என இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.