undefined

 சாலையை கடந்தவர் மீது அசுர வேகத்தில் மோதிய பேருந்து..  பேருந்தை சிறைப்பிடித்த ஊர்மக்கள்!! 

 

சாலையை கடக்க நின்று கொண்டிருந்த நபர் மீது அதிவேகத்தில் வந்த தனியார் பேருந்து மோதி பயங்கர விபத்துள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள அவினாசிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னுசாமி. 46 வயதாகும் இவர் வேன் ஓட்டுநராக பணிபுருந்து வருகிறார். இவர் நேற்று மதியம் தனது இரு சக்கர வாகனத்தில் சாலையை கடந்து செல்வதற்காக காங்கயம் பேருந்து நிலையம் அருகே நின்று கொண்டிருந்தார்.அப்போது ஈரோட்டில் இருந்து பழனிக்கு தனியார் பேருந்து ஒன்று அதிவேகத்தில் சென்றுக்கொண்டிருந்தது.

அப்போது அந்த பேருந்து பொன்னுசாமி மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பொன்னுசாமி பேருந்திற்கு அடியில் சிக்கி படுகாயமடைந்தார். உடனே அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் பொன்னுசாமியை மீட்டு, காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து பொதுமக்கள் மற்றும் வாகன ஒட்டிகள் மிகவும் ஆவேசம் அடைந்து அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்திய தனியார் பஸ்சை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த காங்கயம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் பொதுமக்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர். இதனால் காங்கயம் பேருந்து நிலையத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.